இந்தியா முழுவதும் 'சுங்கச்சாவடிகளில்' இவர்களுக்கு மட்டும் தனிவழி !

Home > News Shots > தமிழ்

By Jeno | Aug 30, 2018 01:37 PM
Madras high court wants separate lanes for judges toll plazas in india

இந்தியா முழுவதும் நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்ல சுங்க சாவடிகளில் தனிவழி அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சுங்கசாவடிகளில் அதிகாரிகள்,நீதிபதிகள், மற்றும் முக்கிய பிரபலங்கள் செல்லும் போது அவர்கள் காக்க வைக்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.இதனால் சிறு சிறு பிரச்சனைகளும் எழுந்தன.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் நிலுவை சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், முரளிதரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது பேசிய நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள் வாகனங்கள் செல்லும்போது உரிய வழி இல்லை என்று கூறினர். வாகனங்களில் நீதிபதிகளுக்கான சின்னம் இருந்தாலும், ஓட்டுநர் அடையாள அட்டை காண்பித்தாலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரக்குறைவாக நடப்பதாக கண்டனம் தெரிவித்தனர்.

 

மேலும் கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்கும் 5,10 நிமிடங்கள் நீதிபதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.இதனால் சுங்கச்சாவடிகளில் அவசர வாகனங்கள் செல்லும் வழியில் நீதிபதிகளின் வாகனங்களை செல்ல அனுமதிக்க வேண்டும் என  தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டனர்.மேலும் உத்தரவை மீறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எச்சரித்தனர்.