தனது சம்பளத்தில் பழங்குடியினருக்கு கழிப்பறை...பாராட்டிய இந்திய கிரிக்கெட் பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 02, 2018 10:57 AM
VVS Laxman wished kerala forest officer PG Sudha to build toilets

கேரளாவில் மலைவாழ் மக்களுக்குத் தனது சம்பளத்தைக் கொண்டு சுமார் 500 கழிப்பறைகளைப் பெண் வனத்துறை அதிகாரி பி.ஜி. சுதா என்பவர் கட்டிக்கொடுத்துள்ளார். அவரை ஏராளமானோர் பாராட்டிய நிலையில்  இந்தியக் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் பாராட்டியுள்ளார்.

 

கொச்சியிலிருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குட்டம்புழா கிராமம். முற்றிலும் மலைப்பிரதேச பகுதியான இங்கு  குறிப்பிட்ட அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லை. இதனால் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 

இப்பகுதியில் வனத்துறை அதிகாரியாக வேலைசெய்பவர்தான் சுதா. கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்தார். சுகாதாரமற்ற முறையில் இப்பகுதி மக்கள் இருப்பதைக் கண்ட வனத்துறை அதிகாரி சுதா, அவர்களுக்கு உதவ நினைத்தார். அதன்படி தான் வாங்கும் சம்பளத்தைக் கொண்டு இக்கிராம மக்களுக்குக் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தார்.

 

இவரது சேவையை பாராட்டி கேரள அரசின் சார்பில் சுதாவிற்கு விருதும் வழங்கப்பட்டது.இந்நிலையில் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் வனத்துறை அதிகாரி சுதாவை பாராட்டியுள்ளார்.

 

ட்விட்டரில் வி.வி.எஸ். லட்சுமண் எழுதியுள்ள பதிவில் , “பி.ஜி. சுதா, 49 வயதான இவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் கேரள வனத்துறை அதிகாரி. சவாலான சூழலில் பணியாற்றும் இவர் குட்டப்புழா வனப்பகுதியில் உள்ள 9 பழங்குடி குடியிருப்புகளில் 497 கழிப்பறைகளைக் கட்டியிருக்கிறார். அப்பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முற்றிலும் இல்லாமல் ஆக்கும் சேவையைச் செய்துள்ளார். கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்களை வெளியிலிருந்து எடுத்துவருவது கடினமான வேலையாக இருந்திருக்கும். அவருக்கு தலைவணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : #KERALA #PG SUDHA #KERALA FOREST OFFICER