செவிலியரின் கைத்தவறி விழுந்ததா?..குழந்தை இறந்ததற்காக போராட்டத்தில் குதித்த பெற்றோர்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 10, 2019 12:51 PM

மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்று செவிலியரின் கைத்தவறி விழுந்து இறந்தவிட்டதாக  கூறி நடந்துள்ள உறவினர்களின் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

protest in front of hospital due to child death

கோவை மாவட்டம் போத்தனூர் என்கிற பகுதியில் விக்ரம்-பவித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவரும் நிலையில், விக்ரமின் மனைவி பவித்ராவிற்கு மகப்பேறு சிகிச்சைக்காக ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை விக்ரம்-பவித்ரா தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தையின் உடல்நிலை சரியில்லை என கூறி மருத்துவர்கள் இன்குபெட்டரில் வைத்துள்ளனர். இதனை அடுத்து திடீரென குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சோகத்துடன் குழந்தையை இறுதி சடங்கிற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது குழந்தையின் தலையில் கட்டப்பட்டிருந்த துணியை விலக்கி பார்த்ததில் அங்கு காயம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் உடனே சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு குழந்தையுடன் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு வந்து விசாரித்ததில் செவிலியர் ஒருவர் குழந்தையை கைத்தவறி கீழே போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள்  மருத்துவமனையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வைத்தனர்.

ஆனால் குழந்தையின் பெற்றோர் கூறிய குற்றச்சாட்டை மறுத்த மருத்துவமனை நிர்வாகம், சந்தேகம் இருந்தால் பிரேத பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது. இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் குழந்தையின் இறுதி சடங்கை முடித்தனர்.

Tags : #COIMBATORE #CHILD #DEATH #HOSPITALS #PROTEST