'கண் எதிரே மரணம்'...மகனை காப்பாற்ற 'தன் உயிரை விட்ட தாய்'...நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 25, 2019 12:38 PM

மரணம் தன் கண் எதிரே இருந்த போதும் மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தாயின் செயல் அனைவரின் நெஞ்சையும் கலங்க வைத்துள்ளது.

Mother died saving her son from the train accident

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்த்தவர் விவசாயி லட்சுமணன்.இவரின் மனைவி ரேவதி.இவர்களுக்கு தனுஷ் என்ற 12வது மகன் பள்ளியில் படித்து வருகிறார்.இவர்கள் குடும்பத்துடன் சென்னைக்குச் செல்ல இருசக்கர வாகனத்தில் திருத்தணி ரயில் நிலையம் வந்தடைந்தனர்.பின்னர் வாகனத்தை பார்க்கிங் செய்து விட்டு வருவதாக கணவர் லட்சுமணன் சென்றுவிட்டார்.

இதனிடையே கணவர் வர காத்திருக்கும் நேரத்தில் நடைமேடைக்கு சென்று விடலாம் என  நினைத்த,ரேவதியும் அவரது மகனும் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளனர்.அப்போது திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் வேகமாக தண்டவாளத்தில் வேகமாக வருவதை பார்த்த பயணிகள் ரேவதியை நோக்கி கூச்சலிட்டனர்.இதனை சற்றும் எதிர்பாராத அவர்,விபத்திலிருந்து மகனை காப்பாற்ற மகன் தனுஷை தூக்கி நடைமேடையில் ஏற்றியுள்ளார்.

ஆனால் அவர் நடைமேடையில் ஏறுவதற்குள் வேகமாக வந்த ரயில் ரேவதி மீது மோதியது.மோதிய வேகத்தில் உடல் சிதறி ரேவதி பரிதாபமாக இறந்தார்.மரணம் கண் எதிரே இருந்த போதிலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மகனை காப்பாற்றிய ரேவதியை பார்த்து அங்கிருந்த பயணிகள் கதறி அழுதனர்.

மேலும் தண்டவாளத்தை கடக்காமல் நடைமேடைக்கு வந்திருந்தால் இந்த சோகம் நிகழ்ந்திருக்காது என அங்கிருந்த பயணிகள் வேதனையுடன் தெரிவித்தார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.