நரமாமிசம் உண்ணும் "அவ்னி புலி": சுட்டு கொன்ற வனத்துறை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 03, 2018 02:59 PM
Tigress Avni Shot Dead In Maharashtra

மனிதர்களை வேட்டையாடி வந்த 6 வயது பெண் புலியினை வனத்துறை அதிகாரிகள் சுட்டு கொன்றிருக்கிறார்கள்.

 

மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மாலா மாவட்டத்திலுள்ள பந்தர்கடாவா பகுதியிலுள்ள டிபேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்தில் 9 புலிகள் வாழ்கின்றன. இந்த சரணாலயத்தில் உள்ளது தான் இந்த 6 வயது நிரம்பிய அவ்னி என்ற பெண் புலி. இந்த பெண் புலிக்கு பிறந்து 9 மாதங்களே ஆன 2 குட்டிகள் இருக்கிறது.

 

இந்நிலையில் கடந்த  2016- ம் ஆண்டு போர்தி கிராமத்தைச் சேர்ந்த ஷோனாபாய் போஸ்லே என்பவரை அவ்னி புலி வேட்டையாடி கொன்றது.இதன் தொடர்ச்சியாக 2018- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 13 பேரை அவ்னி புலி கொன்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் அவ்னியின் இரு குட்டிகளும்  நரமாமிசத்தைச் சாப்பிட்டு பழகியிருந்ததோடு, தாய் மனிதர்களை வேட்டையாடுவதை அவை பார்த்திருந்தன. பின்னாளில் மிகக் கொடிய உயிர்க்கொல்லிகளாக இந்தக் குட்டிகள் மாறும் அபாயம் வேறு இருந்தது.

 

இதனையடுத்து பந்தர்கவாடா காட்டுப் பகுதியையொட்டி வாழும் மக்கள் அவ்னி புலியை கொல்ல வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இதனால், அவ்னியை சுட்டுக் கொல்ல பம்பாய் உயர்நீதிமன்றத்திடம் வனத்துறையினர் அனுமதி வாங்கினர். 

 

விலங்கு நல ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டனர். உச்சநீதிமன்றம் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. அவ்னியின்  குட்டிகளைக் கொல்லக்கூடாது. உயிரோடு பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

 

தொடர்ந்து 200 பேர் கொண்ட மிகப் பெரியக் குழு ட்ரோன் உதவியுடன் அவ்னி புலியைக் கொல்ல 3 மாதங்களாக முயன்று வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அவ்னி சுட்டுக் கொல்லப்பட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Tags : #TIGRESS AVNI #KILLED 13 PEOPLE