எஸ்.பி.ஐ வாடிக்கையாளரா நீங்கள்.. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் புதிய ஏடிஎம் கார்டுகள்..எஸ்.பி.ஐ அறிவிப்பு !

Home > News Shots > தமிழ்

By Jeno | Aug 27, 2018 01:29 PM
Chip based debit cards by dec 31 sbi to customers

தற்போது பயன்பாட்டில் இருந்து வரும்  வங்கி அட்டைகள் காந்தப் பட்டை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ‘ஸ்கிம்மா்’ கருவி மூலம் நகல் எடுத்து மோசடியாளா்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தடுப்பதற்காகக் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ‘சிப்’ அடிப்படையில் கார்டுகளை வழங்குமாறு ரிசா்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனால், வங்கி அட்டை முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும்.

 

இதனால் தற்போது பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுகளைக் கொடுத்துவிட்டு, ‘சிப்’ அடிப்படையிலான புதிய கார்டுகளை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.

 

இந்தப் பாதுகாப்பு அம்சத்தை முழுமையாகச் செயல்படுத்த எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ட்விட்டரில் எஸ்பிஐ நேற்று (ஆகஸ்ட் 26) தகவல் வெளியிட்டுள்ளது. "அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, ஆா்பிஐ வழிகாட்டுதலின்படி நமது வங்கியின் டெபிட் மற்றும் ஏடிஎம் அட்டைகளை ‘சிப்’ தொழில்நுட்பத்தில் மாற்ற இருக்கிறோம்.

 

வாடிக்கையாளர்கள் தங்கள் அட்டைகளுக்குப் பதிலாக புதிய அட்டைகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. இதற்கு, இந்த ஆண்டு இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய அட்டைகளைப் பெற, வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கிளைக்கு நேரில் சென்றும், நெட் பேங்க்கிங் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

 

எஸ்பிஐ சார்பில் இதுவரை 28.9 கோடி டெபிட், ஏடிஎம் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பகுதி, ஏற்கெனவே சிப் தொழில்நுட்பத்தில் உள்ளன. இப்போது, அனைத்து கார்டுகளையும் சிப் தொழில்நுட்பத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, அனைத்து வங்கிகளுமே, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #SBI #ATM CARD