‘இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை, நீட் ரத்து, எழுவர் விடுதலை..இன்னும் இருக்கு..’ திமுக தேர்தல் அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 19, 2019 11:55 AM

நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக உள்ள நிலையில், கூட்டணி கட்சிகள், கட்சி வேட்பாளர்கள் என எல்லாமே அறிவிக்கப்பட்டு வருவதால் தேர்தல் சீசன் களைகட்டத் தொடங்கிவிட்டது எனலாம்.

MK Stalin releases DMKs manifest for loksabhaelections 2019

திமுக-அதிமுகவைப் பொருத்தவரை, 8 தொகுதிகளில் நேரடியாக மோதுவதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இருவேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் பரபரப்பாக செயல்படத் தொடங்கியுள்ள இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக பிரச்சார வேலையை  தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

அதன்படி வரும் 20-ஆம் தேதி(நாளை) தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரையிலான தனது சுற்றுப்பயணத்துக்கான திட்ட விபரங்களை வெளியிட்டுள்ளார். இதேபோல் திமுக- அறிக்கையினையும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து வெளியிட்டுள்ளார். அதன் பின்னர், அறிக்கையின் முக்கிய அம்சங்களை மட்டும் அங்கேயே வாசித்த மு.க.ஸ்டாலின், பாஜகவினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து, வேலையில்லா திண்டாட்டமும் விலைவாசியும் ஏறியது போல, தமிழகத்தில் அதிமுகவினால் ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளதால் அரசு அவல நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

பின்னர் திமுகவின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட ஸ்டாலின், தங்கள் தேர்தல் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தேர்தல் அறிக்கையினை  உருவாக்குவதற்காக மக்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் ஆன்லைன் மூலமாக கேட்டதாகவும், அதற்காக ரெஸ்பான்ஸ் செய்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் இம்முறை, சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிப்பதற்கான சட்ட திருத்தம், தனி நபர் ஆண்டு வருமானம் 86,000-லிருந்து 1,50,000 ஆக உயர்த்தப்படுவது, நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது, கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடங்கப்படுவது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை,  தென்னிந்திய நதிகளை இணைப்பது, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை, இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் குடியேறியுள்ள தமிழர்கள் அனைவருக்கும் தாமதமின்றி இந்தியக் குடியுரிமை அளிப்பது, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்குதல் உள்ளிட்ட அம்சங்கள் திமுக-வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.